Saturday 13 September 2014


ஒரு உன்னதமானவனின் தலைக்கனம்
..............................................
சிந்திக்க தெரிந்த அனைத்தும்
தேடும் விடையில்லா வினா
'நான் யார் ?'
ஏன் சிந்தையற்றவைக் கூட
தேடியிருக்கலாம்
நான் யார்
நானும்தான் கேட்டேன்
'நான் யார் !'
ஒரு தமிழன்?
இல்லை. 
மொழியற்றவனின் உடல்மொழிதலையும் உணர்ந்துப் பார்த்தவன்.
ஒரு இந்தியன்?
இல்லவே இல்லை. 
பாகிஸ்தானியின் கண்ணீரிலும் 
கரைந்துப் போனவன்.
ஒரு மனிதன்? 
வாய்ப்பே இல்லை
சின்னஞ்சிறு நாயின் குழைவிலும்
சிலிர்த்துப் போனவன்.
அப்படியானால் 
நான் யார்? 
என்னை உருவாக்கியவை 
எவை எவை
தேடினேன்!
தாயின் சத்து
தந்தையின் வித்து
வெயிலோனின் வர்ணங்கள்
மழலையின் மழலை
பச்சிளங்கன்றின் ஸ்பரிசம்
முன்பின் தெரியாதவனின்
புன்சிரிப்பு
நெடுநாள் அறிந்தவனின்
பெருங்கோபம்
வழிப்போக்கனின் அசட்டை
இளங்கன்னியின் கடைக்கண் பார்வை
கண்ணீரைப் பார்த்துக் 
கலங்கியவனின் கண்ணீர்
உவகையைப் பார்த்துப்
பூரித்தவனின் புன்னகை
சிறுமையைக் கண்டு
சினந்தவனின் சீற்றம்
ஏழ்மையைக் கண்டு 
இரங்கியவனின் இரக்கம்
பலநாள் பசித்தவன்முன்
நான் கொண்ட
பெரும் போஜனம்
என்நினைவுடன் மரித்துப்போனவர்களுடன்
மரித்துப்போன எந்தன் நினைவுகள்
இவை மட்டுமா என்னை உருவாக்கியவை!
இன்னும் தேடினேன் 
நான் யார்! 
உன்னதமான சகோதரிகள்
படைத்த சகோதரனா
உன்னதமான தாய்கள்
படைத்த மகனா
உன்னதமான தோழர்கள்
படைத்த தோழனா
உன்னதமான பொருட்கள்
படைத்த ஜடப்பொருளா
உன்னதமான உயிர்கள்
உருவாக்கிய உணர்வா
எந்த வரையரைக்குள்ளும்
சிக்காத
நான் யார்!
நான் யார்?

பிரபஞ்சத்தின் அனைத்து
உன்னதங்களும்
உண்டாக்கிய
மகோன்னதன்.
அன்புமய வெளியில்
எண்ணிலா மகோன்னதர்களின்
வரிசையில் நானும் ஒரு மகோன்னதன்.
இன்னும் உன்னதங்களைத் தேடும் மகோன்னதன்.
மகோன்னதர்களை படைக்கும்
மகோன்னதமானவன் .
இத்தனைத் தெரிந்தும்
இன்னும் தேடுகிறேன்
'நான் யார் !?'
இனியும் தேடுவேன் ........

No comments:

Post a Comment