Monday 26 January 2015

சந்தடியில்லாமல் சரிந்த சாக்கடைப்புழு
----------------------------
என்னால் புத்தர் போல
அன்பு போதிக்க
முடியாது
என்னால் இயேசு போல மனக்காயம்நீக்க மருந்துதர
முடியாது
என்னால் முகம்மதுநபி போல வாழ்க்கைக்கான வழிகாட்ட
முடியாது
என்னால் மார்க்ஸ் போல பொதுவுடைமைச்சிந்தை புகுத்த
முடியாது
என்னால் அம்பேத்கர் போல சாதியொழிக்க போராட
முடியாது
என்னால் பெரியார் போல
பகுத்தறிவு பரப்ப
முடியாது.
அன்பின் அடிச்சுவடுஅறியாமல்
மனக்காயங்களுடன் மயங்கி வாழத்தெரியாமல் வாழ்ந்து
தனிஉடைமைகளை தனதாக்கி
சாதிப்பெண்ணுடன் சல்லாபித்து
சாதி தொடர சந்ததி தொடங்கி
இதுதான் பரிபூரண இன்பம்
என்ற மூடநம்பிக்கையில்
துர்நாற்றம் சுவைக்கும்
சாக்கடைப் புழுவாய்
சந்தடியில்லாமல் சாகத்தான்
முடியும்.



No comments:

Post a Comment