Monday 26 January 2015

நடந்தது என்ன ?
-------------------
கதிரவன் மீது வந்த புகாரைப் பாருங்கள்.

இரவு  தன்னை
கடத்தியதாய் இட்டுகட்டியது.
கடல்  தன்னில்
முழுகி எழுவதாய் கதை சொன்னது.
வானம் நீலம் மஞ்சள் சிவப்பு என சாயமூற்றி
ஹோலி கொண்டாடி
வஞ்சித்தான் என வெடித்தது.
மலர் தன்னைப்
பார்வையால் கொல்(ள்)வதாய்
மருகி நின்றது.
பனித்துளி தன்னை
களவாடியதெப்படி என்ற
காரணம் சொன்னது...

நடந்தது என்ன ?

கதிரவன்
பேரன்புடன்
கோடி கரங்களை விரித்தபடி
கோடி ஆண்டுகளாய் இப்பிரபஞ்சத்தில்
சுற்றுலா போகிறான் குடும்பத்துடன்.

அவன்
இறப்பை நோக்கியோ
இலக்கை நோக்கியோ
பயணிப்பதில்லை.
கோடி கரங்கள் விரித்தபடி
குடும்ப பயணம் மட்டும் தான்.
அது திசையில்லா பயணம்
திக்கு திசையில்லா பிரபஞ்ச
வெளியில்
புரியாத பயணம்
புதிரான பயணம்
அந்தப் பயணத்தில்
கொள்கை இல்லை
குறிக்கோள் இல்லை
குறுக்கீடு இல்லை....

அந்த கரங்கள் யாரையும்
அணைப்பது கூட இல்லை. .
அவன் கரங்கள் நீண்டிருக்கின்றன அவ்வளவே.

இருள் அவன் கரங்கள் இடையே
ஒளிந்து கொள்கிறது.
இருள்
ஒளிந்து கொண்ட கடத்தல்
நாடகம் இது.

கடல் அந்த கரங்களை
ஆரத் தழுவிக் கொள்கிறது.
கடல்
தழுவிக் கொண்ட
தாப நடனமிது.

வானம் அந்த கரங்களை முறுக்கி
சித்ரவதை செய்து
வண்ணங்களை பிழிகிறது.
வண்ணம் பிழியும்
வானத்தின்  நிஜ
ஹோலி இது.

மலரின் புகார் தான்
புழுகின் உச்சம்
அண்டப் புழுகு ஆகாசப் புழுகில்லை
அது
பிரபஞ்ச புழுகு.
கரங்களில் ஏது பார்வை !
இல்லாத  பார்வையால் கொல்ல எப்படி முடியும்.
கதிரவன் கரங்கள் மலரினும்
மெல்லியதாயிற்றே
அதனால் மலர்களைக் கொள்ளவும் முடியாதே.

மலரின் இதழ்கள் கதிரவனின்
கரங்களை முத்தமிடுவதை
நீங்களே பாருங்கள்.
இதழ் முத்தத்தால் கரங்களை
மயக்கிவிட்டு
பார்வையால் கொல்(ள்)வதாய்
பசப்புகிறாள்.
மயங்கிய கரங்களின்
முத்தக் களிப்பு அது
மீளாத களைப்பு அது.

பனித்துளி கதிரவன்  கரங்களைக்
களவாடி இறக்கை செய்து
பறந்து போகிறது.
காற்று வெளியில் காதல்
கொண்டு
ஓடிப்போன பனித்துளி இது.
இது ஒரு களவாணியின் காதல்.



No comments:

Post a Comment