Monday 26 January 2015

புர்கா வரைந்த ஓவியம்
----------------------------
புர்கா பறிப்பு,பெண் ,சுதந்திரம், புரட்சி
மனதில் முனகல் சத்தம்.

ஜன்னல் சிறையில்
மேக போர்வைக்குள் முழுநிலா.
டிசம்பரின் குளிர்
தாங்காமல் வெளிறியிருந்தாள்.
நிலாவும் வடதுருவ வாசியோ!

புர்கா வரைந்த ஓவியம்
ஒன்று எதிர்வீட்டில்
ஜன்னல் சிறையில் வாடும்
என்னைக் கண்டு வாடியது.

வானிலோ குளிர்நிலா
இல்லை கடும்குளிரில் நிலா.
குளிர் காற்றின் வேகம் தாளாமல்
அலையும் மேக போர்வைகளை
இழுத்துப் போர்த்திட
போராடிக் கொண்டிருக்கிறாள்.

எதிர்வீட்டு புர்கா ஓவியத்தில்
இரு கரும்பிறை நிலவுகளுக்கு
மிக அண்மையில்
அமாவாசை பூ சூடிய
இரு முழுநிலவுகள்
மவுனமாய் புரட்சி செய்து
ஜன்னல் சிறையில் சுதந்திரமாய்
திரிந்த என்னை
உள்ளச்சிறையில் அடைத்தது.

என்னை விட அழகியா இவள்!
மேக போர்வை விலக்கி
முழுமுகம் காட்டி பெருமையில்
சிரித்தாள் நிறைமதியாள்.

புர்கா போர்வை களையாமலே
முழுமதிக்குள்
இரு கரும்பிறை காவலில்
இருந்த அமாவாசை மலர்ச்சூடிய
நிறைமதிகள்
நிலவை பார்த்தது தான் தாமதம்
போர்வைக்குள் நுழைந்தது நிலா. நிலாவை
காணவில்லை என்று இஸ்ரோ
விஞ்ஞானிகள் தேடுவதாக
செய்தி.

திரும்பவும் மனதில் முனகல்  சுதந்திரம் பறித்த புரட்சி பெண். புர்கா பெண்  !













No comments:

Post a Comment